என் எட்டில் மீதமுள்ள நான்கு இங்கே:
5). எம்.ஏ
முதல் ஆண்டில் படிக்கும் பொழுது, விடுதி அறையில் மூவர் இருந்தோம். மூவருக்கும் அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. ஒரு நண்பருக்குப் போதிய வருகைப்பதிவு இல்லையென்பதால் முதல் ஆண்டிலேயே நிறுத்தப் பட்டார்.(ரூமிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் விட்டுடுவாங்களா?) புத்திசாலித்தனமாக அடுத்த ஆண்டில் அவர் பி.எட்(B.Ed) வகுப்பிற்கு மாறி படிப்பைத்தொடர்ந்தார்;பின்பு அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனார். எம்.ஏ இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நான் துணைப்பேராசிரியராகப் பணியேற்றேன். சுமாரான மதிப்பெண்கள் பெற்ற மற்றவர் திருத்துனர்(Tutor) பணியேற்றார். மூவருமே கற்பிக்கும் பணியை ஏற்றிருந்தோம்.
1967- சட்டமன்றத் தேர்தல்! பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர் பதவிவிலகி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்! மூன்றுமுறை எம்.எல்.ஏ ஆகவும் ஒருமுறை எம்.பி(மாநிலங்கள் அவை) ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
திருத்துனராகப் பணியாற்றியவர் 1970 களின் ஆரம்பத்தில் பணியிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். 1977 தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், 1980 தேர்தலில் எம்.எல்.ஏ ஆனார். சில ஆண்டுகளில் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்!
நான் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்றேன்.
நீதி? நீங்களே முடிவு செய்யுங்கள்.
6).பல்கலைக்கழக இளங்கலை- பொருளியல் பிரிவின் பாடதிட்டக்குழுவின் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். உறுப்பினர்களுள் ஒருவரான டாக்டர். ராமதாஸ் (தற்பொழுது புதுச்சேரி தொகுதியின் நாடாளுமன்ற பா.ம.க உறுப்பினர்) “மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, பாடதிட்டத்தில் பெரும்பகுதியை மாற்றலாம்” என்றார். “அது செயல்வடிவம் பெற நீண்ட காலம் ஆகும்.எனவே, பொருளியலில் ஒரு புதிய பிரிவை உருவாக்குவோமே” என்றேன்.அதன்படி” நிறுமப் பொருளியல்” (Corporate Economics-Main) எனும் முதன்மைப்பாடத்திற்கான பாடதிட்டத்தை உருவாக்கினோம். கல்விக்குழு இப்பாடதிட்டத்தை வரவேற்று அங்கீகரித்தது. ஆனால், இன்றுவரயில் ஒரு கல்லூரியில் மட்டுமே இப்பிரிவு பயிற்றுவிக்கப்படுகின்றது. இத்தயக்கத்திற்கு எது அல்லது யார் காரணம் என்பதை இன்னும் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.
7).நான் ஒரு கணினி கைநாட்டு. கணினியில் நுழையவும் வெளியேறவும் மட்டுமே தெரியும். சக வலைப்பதிவர்கள் உதவியால் வலையுலகில் வலம் வருகின்றேன். இதில் ட்டிபிஆர் ஜோஸப், துளசிட்டீச்சர், பொன்ஸ், பாலபாரதி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது. ஆகஸ்ட் 5,’ பதிவர் பட்டறை’யில்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
8).தருமி அவர்களை மூத்த பதிவர் என்று குறிப்பிட்ட பொழுது, ஞானவெட்டியான் அவர்கள் தாம்தான் மூத்த பதிவர் என்றார். என் பிறந்ததேதியை அவருக்குத் தெரிவித்தேன்.
அவர்,”நான் விலகிக்கொள்கிறேன்; நீங்கள்தான் மூத்தவர்” என்றார்.(வேறு யாரும் இருந்தால் சொல்லிடுங்க சாமி). வலைதளத்தில் அதிக நேரம் செலவழிக்கும் (வயதால்) மூத்த பதிவர் நான். ஆனாலும் “அனுபவிக்கணும்….ஆராயக்கூடாது”{உபயம்: பாலாஜி(வெட்டிப்பயல்)} என்பதை மறப்பதில்லை!
யார் யார் எட்டு போட்டீங்க, யார் யார் போடவில்லை என்பது தெரியவில்லை. எனவே இதுவரையில் போடாத நண்பர்களை அழைக்கின்றேன். ஏற்கனவே போட்டவர்கள் மீண்டும் போட்டாலும் பரவாயில்லெ; படிக்க நாங்க இருக்கிறோம்லெ!
Read Full Post »